பஞ்சாட்சரம்

saran
1

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ

மந்திர சாஸ்திரம் மிகவும் நுட்பமான செயல் திட்ட வரையறைகளை கொண்ட சூட்சுமமானது. அதில் பல்வேறு தேவதா ரூபங்களின் வடிவங்கள் சப்த வடிவில் அடங்கியுள்ளது. அதை சப்த பிரம்மம் என்றே வழங்குவார்கள். ஸ்தூல சாரம், சூட்சும சாரம், காரண சாரம் என்று மூன்று வித தேக அமைப்புகள் நமக்கு உண்டு. ஸ்தூல சாரமான இந்த பரு உடலுக்குள் சூட்சும சாரமும் அதற்குள் காரண சாரமும் அடங்கியுள்ளது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள் அவசியமாகின்றது. மந்திரங்கள் பஞ்சபூதங்களோடு தொடர்பு படுத்தபடுகின்றன. பஞ்சாட்சர மந்திரத்தின் சிறப்புகளை காணலாம்.

ஸ்தூல பஞ்சாட்சரம்
நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது.

சிவ மகாபுராணத்தில் வாயு சம்ஹிதையில் உள்ள உத்தர பாகத்தின் ஆரம்பத்தில் ஐந்து அட்சரங்களும் அதற்கு உரிய நிறங்களும், ரிஷிகளும், சிவபெருமானுடைய எந்தெந்த முகத்துக்கு எந்தெந்த அட்சரங்கள் என்று தெளிவாக விளக்கப்பட்டிருகிறது.

ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்று திருஞானசம்பந்தரின் நமசிவாய பதிகம் உள்ளம் உருக நமசிவய மந்திரத்தின் பெருமையை உயிரும் உருக விவரிக்கிறது.

சூட்சும பஞ்சாட்சரம்
சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
என்று சிவ வாக்கியர் மிக அழகாக கூறுகிறார்.

சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே
என்ற உத்திரவாதத்தை மிகவும் உறுதியாக தருகிறார் ஔவையார்.

சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...
என்று திருநாவுக்கரச பெருமான் தமது நெஞ்சத்திற்கே எடுத்து சொல்கிறார்.

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே
என்று உளமுருகப் பிரார்த்திக்கிறார் மாணிக்க வாசக! என்று சிவபெருமானாலேயே அழைக்கப்பட்ட திருவாதவூரார்.

காரண பஞ்சாட்சரம்
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

என்று திருமந்திரம் சிவ சிவ என்பதன் மகத்துவத்தை பற்றி சொல்கிறது. அது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறள் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

இல்லற வாழ்வில் உள்ளவர்கள் இம் மந்திரத்தோடு பிரணவத்தை சேர்த்து “ஓம் சிவ சிவ ஓம்” என்று கலையும், மாலையும் 108 முறை ஜபிக்கலாம்.

கருத்துரையிடுக

1கருத்துகள்
  1. ஓம் நமச்சிவாய ஒம் ! பஞ்சபூத மந்திரங்களும், யந்திரங்களும்,பூஜைவிதி முறைகளையும், தெரிந்து கொள்ள, ஆசைப்படுகிறேன்.வெளியிடுங்களேன்

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக