திருமந்திரம் - ஏழாம் தந்திரம் (7/9)

saran
0

ஏழாம் தந்திரம் (1704 - 2121)




1. ஆறு ஆதாரம்

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்

கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்

மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்

காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1704

 

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்

மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி

போதா லயத்துஅ விகாரந்தனிற்போத

மேதாதி ஆதார மீதான உண்மையே. 1705

 

மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்

தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்

பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்

கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 1706

 

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்

மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி

போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி

சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 1707

 

மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி

ஆதார சோதனை அத்துவ சோதனை

தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால்

ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 1708

 

ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்

கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்

ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே

ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 1709

 

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்

போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்

ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்

ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 1710

 

ஆயு மலரின் அணிமலர் மேலது

ஆய இதழும் பதினாறும் அங்குள

தூய அறிவு சிவானந்த மாகிப்போய்

மேய அறிவாய் விளைந்தது தானே. 1711

 

2. அண்டலிங்கம் (உலக சிவம்)

 

இலிங்கம தாவது யாரும் அறியார்

இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்

இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்

இலிங்கம தாக எடுத்தது உலகே. 1712

 

உலகில் எடுத்தது சத்தி முதலா

உலகில் எடுத்தது சத்தி வடிவாய்

உலகில் எடுத்தது சத்தி குணமாய்

உலகில் எடுத்த சதாசிவன் தானே. 1713

 

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்

ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்

ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்

ஆகம அத்துவா ஆறும் சிவமே. 1714

 

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை

வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று

ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று

காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 1715

 

ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி

ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்

கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்

தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 1716

 

தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்

மாபரத் துண்மை வழிபடு வாரில்லை

மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்

பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 1717

 

தூவிய விமானமும் தூலமது ஆகுமால்

ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்

ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்

ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 1718

 

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்

கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்

அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்

உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 1719

 

துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்

கன்றிய செம்பு கனல்இர தம்சலம்

வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்

தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 1720

 

மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்

இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்

குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்

துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 1721

 

அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி

எதுஉண ராவகை நின்றனன் ஈசன்

புதுஉணர் வான புவனங்கள் எட்டும்

இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 1722

 

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்

உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே

பகலிட மாம்முனம் பாவ வினாசன்

புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 1723

 

போது புனைசூழல் பூமிய தாவது

மாது புனைமுடி வானக மாவது

நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்

ஆதியுற நின்றது அப்பரி சாமே. 1724

 

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்

திரைபொரு நீரது மஞ்சன சாலை

வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை

கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 1725

 

3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)

 

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1726

 

உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்

நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 1727

 

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்

வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்

தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக

வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 1728

 

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை

வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள

பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு

வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 1729

 

4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)

 

கூடிய பாதம் இரண்டும் படிமிசை

பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்

தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து

நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1730

 

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்

மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்

ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்

சாதா ரணமாம் சதாசிவந் தானே. 1731

 

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை

ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ

ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்

ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 1732

 

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்

அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்

அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு

அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 1733

 

சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள

சமயத்து எழுந்த இராசி ஈராறுள

சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள

சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 1734

 

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு

நடுவு படிகநற் குங்குமவன்னம்

அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்

அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 1735

 

அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள

அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள

அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்

நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 1736

 

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்

சத்தி சிவமிக்க தாபர சங்கமம்

சத்தி உருவம் அருவம் சதாசிவம்

சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 1737

 

தத்துவ மாவது அருவம் சராசரம்

தத்துவ மாவது உருவம் சுகோதயம்

தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்

தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 1738

 

கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை

வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்

ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு

மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 1739

 

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்

சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்

அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்

தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 1740

 

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்

உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்

தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்

அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 1741

 

நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்

தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்

காணும் அகோரம் இருதயம் குய்யமாம்

மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 1742

 

நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்

வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்

செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்

செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 1743

 

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்

விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி

வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்

பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 1744

 

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்

சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்

சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்

சத்தி உருவாம் சதாசிவன் தானே. 1745

 

மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்

தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும்

கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்

மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 1746

 

ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து

என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது

தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி

நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 1747

 

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்

கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்

புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே

பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. 1748

 

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்

தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்

ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென

ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 1749

 

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்

தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்

தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்

தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 1750

 

ஆரும் அறியார் அகாரம் அவனென்று

பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி

தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்

மாறி எழுந்திடும் ஓசையதாமே. 1751

 

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்

இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்

இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்

இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 1752

 

5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்)

 

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்

உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்

அகார உகாரம் இரண்டும் அறியில்

அகார உகாரம் இலிங்கம் தாமே. 1753

 

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்

மேதாதி நாதமும் மீதே விரிந்தன

ஆதார விந்து ஆதிபீட நாமே

போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 1754

 

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்

சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்

சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்

சத்தி சிவமாகும் தாபரம் தானே. 1755

 

தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்

வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்

பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்

தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 1756

 

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்

விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்

அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்

வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 1757

 

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா

சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்

சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்

சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 1758

 

மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை

மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது

நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்

இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 1759

பராபரன் எந்தை பனிமதி சூடி

தராபரன் தன்னடி யார்மனக் கோயில்

சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்

அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 1760

 

பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்

குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்

அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்

பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 1761

 

அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று

சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்

என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை

ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 1762

 

6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம்)

 

உருவும் அருவும் உருவோடு அருவும்

மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்

குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்

தருவென நல்கும் சதாசிவன் தானே. 1763

 

நாலான கீழது உருவம் நடுநிற்க

மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்

நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்

பாலாம் இவையாம் பரசிவன் தானே. 1764

 

தேவர் பிரானைத் திசைமுக நாதனை

நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை

ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி

யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 1765

 

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற

ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற

காண்டகை யானொடும் கன்னி உணரினும்

மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 1766

 

ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்

நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை

பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 1767

 

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே

சுத்த சிவபதம் தோயாத தூவொளி

அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்

ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 1768

 

கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்

எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்

பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே

திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 1769

 

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்

முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்

சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை

உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 1770

 

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி

ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்

சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்

சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 1771

 

சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி

சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும்

சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை

சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 1772

 

7. சிவலிங்கம் ( சிவகுரு )

 

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்

பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்

நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை

வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1773

 

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு

நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி

உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்

புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 1774

 

ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை

நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ

வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற

அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 1775

 

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்

பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்

நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்

பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 1776

 

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று

ஆவி எழும்அள வன்றே உடலுற

மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்

பாவித்து அடக்கிற் பரகதி தானே. 1777

 

8. சம்பிரதாயம் (பண்டை முறை)

 

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு

படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து

நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி

கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1778

 

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான

வியவார் பரமும்பின் மேவும் பிராணன்

செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே

உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 1779

 

பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்

நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்

உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது

வைச்ச பதமிது வாய்திற வாதே. 1780

 

பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை

ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்

தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்

வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 1781

 

தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்

இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்

பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்

கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 1782

 

கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு

நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்

பாடல் உடலினில் பற்றற நீக்கியே

கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 1783

 

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்

கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்

கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்

கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 1784

 

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி

நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்

பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை

பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 1785

 

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்

உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. 1786

 

காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்

சால விரிந்து குவிந்து சகலத்தில்

ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்

தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 1787

 

நானென நீயென வேறில்லை நண்ணுதல்

ஊனென ஊனுயிர் என்ன உடனின்று

வானென வானவர் நின்று மனிதர்கள்

தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 1788

 

அவனும் அவனும் அவனை அறியார்

அவனை அறியில் அறிவானும் இல்லை

அவனும் அவனும் அவனை அறியில்

அவனும் அவனும் அவனிவன் ஆமே. 1789

 

நானிது தானென நின்றவன் நாடோ றும்

ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்

வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்

நானிது அம்பர நாதனும் ஆமே. 1790

 

பெருந்தன்மை தானென யானென வேறாய்

இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்

பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே

திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 1791

 

9. திருவருள் வைப்பு

 

இருபத மாவது இரவும் பகலும்

உருவது ஆவது உயிரும் உடலும்

அருளது ஆவது அறமும் தவமும்

பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1792

 

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்

தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்

வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்

ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 1793

 

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்

வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்

செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்

அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 1794

 

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்

பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை

ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்

சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 1795

 

தானே அறியும் வினைகள் அழிந்தபின்

நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்

ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்

தேனே யனையன் நம் தேவர் பிரானே. 1796

 

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை

வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்

ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்

தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 1797

 

அருள்எங்கு மான அளவை அறியார்

அருளை நுகர்அமு தானதும் தேரார்

அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்

அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 1798

 

அறிவில் அணுக அறிவது நல்கிப்

பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு

அறிவது ஆக்கி அடியருள் நல்கும்

செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 1799

 

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு

அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு

அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி

அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 1800

 

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி

அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு

அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி

அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 1801

 

பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்

நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்

கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்

நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 1802

 

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்

மறவா அருள் தந்த மாதவன் நந்தி

அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்

உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 1803

 

அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே

அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு

அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்

அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 1804

 

ஆயும் அறிவோடு அறியாத மாமாயை

ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்

ஆய பலஇந் திரியம் அவற்றுடன்

ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 1805

 

அருளே சகலமும் ஆய பவுதிகம்

அருளே சராசர மாய அமலமே

இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்

அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 1806

 

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து

தவமான ஐம்முகன் ஈசன் அரனும்

பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா

நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 1807

 

அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா

அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே

இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்

தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 1808

 

தானே படைத்திடும் தானே அளித்திடும்

தானே துடைத்திடும் தானே மறைத்திடும்

தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்

தானே வியாபித் தலைவனும் ஆமே. 1809

 

தலையான நான்கும் தனதுஅரு வாகும்

அலையா அருவுரு வாகும் சதாசிவம்

நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்

துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 1810

 

ஒன்றது வாலே உலப்பிலி தானாகி

நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை

துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன

நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 1811

 

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு

ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்

போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு

வீயத் தகாவிந்து வாக விளையுமே. 1812

 

விளையும் பரவிந்து தானே வியாபி

விளையும் தனிமாயை மிக்கமா மாயை

கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்

அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 1813

 

10. அருள் ஒளி

 

அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்

அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்

அருளின் பெருமை அறியார் செறியார்

அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1814

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி

ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி

பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்

ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 1815

 

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்

கூடிய வாறே குறியாக் குறிதந்தென்

ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 1816

உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்

பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி

அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி

கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 1817

 

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்

விளக்கினை முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 1818

 

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்

ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள

ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 1819

 

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி

நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி

அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த

திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 1820

 

அருளது என்ற அகலிடம் ஒன்றும்

பொருளது என்ற புகலிடம் ஒன்றும்

மருளது நீங்க மனம்புகுந் தானைத்

தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 1821

 

கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை

வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்

பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்

தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 1822

 

11. சிவபூசை

 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1823

 

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்

காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்

ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்

பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 1824

 

பான்மொழி பாகன் பராபரன் தானாகும்

ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து

மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு

சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 1825

 

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கனைகழல் ஈசனைக் காண அரிதாம்

கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்

புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 1826

 

மஞ்சன மாலை நிலாவிய வானவர்

நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்

அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்

அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 1827

 

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு

அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்

எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை

நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 1828

 

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்

ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்

சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே

முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 1829

 

மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்

சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி

மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 1830

 

ஆரா தனையும் அமரர் குழாங்களும்

தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்

பேரா யிரமும் பிரான்திரு நாமமும்

ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 1831

 

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்

தான்அந்த மில்லாத் தலைவன் அருளது

தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்

பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 1832

 

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி

மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்

தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்

பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 1833

 

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு

உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு

கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்

அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 1834

 

கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து

வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்

பழிப்படு வார்பல ரும்பழி வீழ

வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 1835

 

பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்

பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்

நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர

வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 1836

 

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று

ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்

மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற

தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 1837

 

தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்

பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை

மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்

நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 1838

 

உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்

பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி

இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி

மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 1839

 

வென்று விரைந்து விரைப்பணி என்றனர்

நின்று பொருந்த இறைபணி நேர்படத்

துன்று சலமலர் தூவித் தொழுதிடில்

கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 1840

 

சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்

ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்

ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான்

மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 1841

 

ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற

மேவித் திரியும் விரிசடை நந்தியைக்

கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்

தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 1842

 

காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்

காணும் அளவும் கருத்தறி வாரில்லை

பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு

மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 1843

 

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி

இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள

வருந்தன்மை யாளனை வானவர் தேவர்

தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 1844

 

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்

அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி

சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்

அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 1845

 

ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது

ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா

ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்

ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 1846

 

12. குருபூசை

 

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்

போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்

ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்

போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1847

 

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுற மாமலர் இட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது

தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 1848

 

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்

ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை

ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்

சேவடி சேரல் செயலறல் தானே. 1849

 

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை

நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை

விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்

நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 1850

 

புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்

பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்

எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்

பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 1851

 

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை

வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்

இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை

வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 1852

 

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்

விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே

சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு

நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 1853

 

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி

அனித உடல்பூத மாக்கி அகற்றிப்

புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்

தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 1854

 

பகலும் இரவும் பயில்கின்ற பூசை

இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்

பகலும் இரவும் பயிலாத பூசை

சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 1855

 

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து

பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி

இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து

இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 1856

 

13. மகேசுவர பூசை

 

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1857

 

தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து

உண்டது மூன்று புவனமும் உண்டது

கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று

எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 1858

 

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை

ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது

மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்

தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 1859

 

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்

சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்

பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு

நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 1860

 

ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்

கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்

நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை

பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 1861

 

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று

நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்

ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று

வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 1862

 

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட

பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை

நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்

பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 1863

 

அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்

தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும்

பழுது படாவண்ணம் பண்பனை நாடித்

தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 1864

 

பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்

புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி

அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 1865

 

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்

அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்

சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்

முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 1866

 

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்

ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்

ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்

போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 1867

 

14. அடியார் பெருமை

 

திகைக்குரி யானொரு தேவனை நாடும்

வகைக்குரி யானொரு வாது இருக்கில்

பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்

அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1868

 

அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்

அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்

அவ்வுல கத்தே அரனடி கூடுவர்

அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 1869

 

கொண்ட குறியும் குலவரை உச்சியும்

அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்

எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்

உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 1870

 

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்

கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்

பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்

கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 1871

 

பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்

உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 1872

 

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்

மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்

புயங்களும் எண்டிசை போதுபா தாள

மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 1873

 

அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்

அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்

அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்

அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 1874

 

கழிவும் முதலும் காதல் துணையும்

அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்

பழியும் புகழும் படுபொருள் முற்றும்

ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே. 1875

 

என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்

அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்

ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்

நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 1876

 

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்

பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்

அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்

கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 1877

 

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி

மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்

புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்

பலமிசை செய்யும் படர்சடை யோனே. 1878

 

அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்

குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை

குறியார் சடைமுடி கட்டி நடப்பார்

மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 1879

 

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்

சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்

அவன்பால் அணுகியே நாடும் அடியார்

இவன்பால் பெருமை இலயமது ஆமே. 1880

 

முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்

எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து

எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்

பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 1881

 

சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்

அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்

நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்

பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 1882

 

மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்

மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்

மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்

மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 1883

 

15. போசன விதி

 

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு

கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்

ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்

விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1884

 

அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்

உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்

பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து

இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 1885

 

16. பிட்சா விதி

 

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு

உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது

அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்

இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1886

 

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்

பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்

பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்

பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 1887

 

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்

நிரந்தக மாக நினையும் அடியார்

இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 1888

 

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்

தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்

பொரஇருந் தான்புக லேபுக லாக

வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 1889

 

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்

தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்

பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்

தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 1890

 

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்

கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்

ஐயம் புகாமல் இருந்த தவசியார்

வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 1891

 

17. முத்திரை பேதம்

 

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை

பாலான மோன மொழியில் பதிவித்து

மேலான நந்தி திருவடி மீதுய்யக்

கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1892

 

துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி

அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி

மருவிய சாம்பவி கேசரி உண்மை

பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 1893

 

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்

ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை

ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி

நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 1894

 

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்

ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்

ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட

மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 1895

 

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்

வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்

வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே

ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 1896

 

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்

ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்

ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி

யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 1897

 

யோகிஎண் சித்தி அருளொலி வாதனை

போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி

ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை

ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 1898

 

துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்

அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்

தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை

நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 1899

 

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை

ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை

தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை

கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 1900

 

தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்

பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்

மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி

நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 1901

 

18. பூரணக் குகை நெறிச் சமாதி

 

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி

உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்

தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்

உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1902

 

தான்இவை ஒக்கும் சமாதிa கூடாது

போன வியோகி புகலிடம் போந்துபின்

ஆனவை தீர நிரந்தர மாயோகம்

ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 1903

 

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி

ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து

தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்

ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 1904

 

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்

தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்

சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்

புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 1905

 

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்

தானற மோனச் சமாதியுள் தங்கியே

தானவன் ஆகும் பரகாயம் சாராதே

ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 1906

 

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்

செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்

செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்

செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 1907

 

உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்

பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்

என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி

தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 1908

 

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்

தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்

அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்

இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 1909

 

19. சமாதிக் கிரியை

 

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்

வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்

நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு

வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1910

 

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்

அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்

மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்

எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 1911

 

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது

நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்

மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்

மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 1912

 

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்

அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்

சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்

அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 1913

 

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து

குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்

தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்

பவமறு நற்குகை பத்மா சனமே. 1914

 

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை

நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி

உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்

இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 1915

 

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்

நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்

பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி

நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 1916

 

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து

விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு

முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே

பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 1917

 

நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்

கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்

தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து

ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 1918

 

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்

மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்

போதறு கண்ணமும் நறும் பொலிவித்து

மீதில் இருத்தி விரித்திடு வீரே. 1919

 

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து

பொரித்த கறிபோ னகம் இள நீரும்

குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை

தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 1920

 

மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்

போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்

பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்

மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 1921

 

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்

போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து

மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்

காதலில் சோடசம் காண்உப சாரமே. 1922

 

 

20. விந்துற்பனம்

 

உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்

உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்

விதியில் பிரமாதி கள்மிகு சத்தி

கதியில் கரணம் கலைவை கரியே. 1923

 

செய்திடும் விந்துபே தத்திறன் ஐந்தும்

செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்

செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்

செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 1924

 

வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்

தந்திடு மாமாயை வாகேசி தற்பரை

உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி

விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 1925

 

விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி

வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து

களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி

உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 1926

 

அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்

வந்த வியாபி எனலாய அந்நெறி

கந்தம தாகிய காரண காரியம்

தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 1927

 

வீயம தாகிய விந்துவின் சத்தியால்

ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்

காயஐம் பூதமும் காரிய மாயையில்

ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 1928

 

புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து

நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை

உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்

திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 1929

 

கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற

நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்

கண்டக லாதியின் காரண காரியத்து

அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 1930

 

அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி

இதுவித்தி லேஉள வாற்றை உணரார்

மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்

பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 1931

 

வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை

வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை

வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை

அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 1932

 

அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்

பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்

திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு

இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 1933

 

இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்

உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்

அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்

மருவிய விந்து வளரும்கா யத்திலே. 1934

 

காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்

காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து

நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்

மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 1935

 

அழிகின்ற விந்து அளவை அறியார்

கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்

அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்

அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 1936

 

 

21. விந்து ஜயம் - போக சரவோட்டம்

 

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்

ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்

பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே

சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1937

 

தானே அருளால் சிவயோகம் தங்காது

தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்

தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்

ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 1938

 

மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்

ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்

ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு

ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 1939

 

ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்

வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு

ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்

ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 1940

 

செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே

எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்

நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி

செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 1941

 

விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்

நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்

படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்

கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 1942

 

கொண்ட குணனே நலமேநற் கோமளம்

பண்டை உருவே பகர்வாய் பவளமே

மிண்டு தனமே மிடைய விடும் போதில்

கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 1943

 

விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே

தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய

கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்

பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 1944

 

பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று

வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே

சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்

மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 1945

 

வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை

வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை

வித்தினில் வித்தை விதற உணர்வரேல்

மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 1946

 

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்

கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்

கருத்தது வித்தாய்க் காரண காரியம்

கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 1947

 

ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்

அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி

ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்

அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 1948

 

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்

துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று

முற்று மதியத்து அமுதை முறைமுறை

செற்றுண் பவரே சிவயோகி யாரே. 1949

 

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்

யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்

மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்

ஆகிய விந்து அழியாத அண்ணலே. 1950

 

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்

மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்

கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து

உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 1951

 

அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்

பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்

அறிவாய் நனவில் அதீதம் புரியச்

செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 1952

 

மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்

காதலது ஆகிய காமம் கழிந்திடும்

சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்

சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 1953

 

காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்

காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்

காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை

காலின்கண் வந்த கலப்பறி யாரே. 1954

 

கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்

நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்

கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை

விலக்கு வனசெய்து மேலணை வீரே. 1955

 

மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்

கோலால் நடத்திக் குறிவழி யேசென்று

பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்

மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 1956

 

விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்

அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்

நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்

தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 1957

 

விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து

நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து

அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்

சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 1958

 

அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள

அமுதப் புனலோடி அங்கியின் மான

அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி

அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 1959

 

யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து

ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்

போகம் சிவபோகம் போகிநற் போகமா

மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 1960

 

மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து

காதலி னால்விடார் யோகம் கலந்தவர்

மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்

காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 1961

 

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்

ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி

நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு

ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 1962

 

விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல

வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்

சிந்தனை மாறச் சிவம்அக மாகவே

விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 1963

 

வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்

வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்

வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்

வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 1964

 

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு

மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு

மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட

வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 1965

 

அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து

தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்

சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்

அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 1966

 

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்

ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை

சென்று பராசக்தி விந்து சயந்தன்னை

ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 1967

 

தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை

வானே உயர்விந்து வந்த பதினான்கு

மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்

தானே சிவகதி தன்மையும் ஆமே. 1968

 

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது

வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்

அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்

விந்து அடங்க விளையும் சிவோகமே. 1969

 

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி

நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்

பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை

அறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை

அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 1970

 

விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்

சந்திர னோடே தலைப்படு மாயிடில்

சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்

அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 1971

 

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன

இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி

மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்

கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 1972

 

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து

ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்

மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு

அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 1973

 

உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்

விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி

கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்

விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 1974

 

22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

 

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்

மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்

எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி

தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1975

 

பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்

புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்

இகலற ஏழுல கும்உற வோங்கும்

பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 1976

 

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்

சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்

வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்

ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 1977

 

தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்

தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்

தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்

தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 1978

 

வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்

துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்

அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்

மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 1979

 

ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்

சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்

கேத முறுங்கேணி சூரியன் எட்டில்

சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 1980

 

ஆதித்த னோடே அவனி இருண்டது

பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது

சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற

வேதப் பொருளை விளங்குகி லீரே. 1981

 

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி

யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்

நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்

ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 1982

 

மண்ணை இடந்துஅதின் கீழொடும்

விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்

கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்

எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 1983

 

பாரை இடந்து பகலோன் வரும்வழி

யாரும் அறியார் அருங்கடை நூலவர்

தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்

ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 1984

 

23. பிண்டாதித்தன்

 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்

கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்

கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட

வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1985

 

ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு

சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்

பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த

னோடே அடங்குகின் றாரே. 1986

 

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து

சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை

சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு

உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 1987

 

24. மன ஆதித்தன்

 

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்

எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப

விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி

ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1988

 

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை

முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை

அந்த இரண்டும் உபய நிலத்தில்

சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 1989

 

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி

ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்

ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற

ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 1990

 

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி

ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது

பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று

ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 1991

 

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்

ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை

முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்

இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 1992

 

25. ஞானாதித்தன்

 

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து

அந்த அபரம் பரநாத மாகியே

வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து

உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 1993

 

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்

தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்

வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு

உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 1994

 

தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்

மூவர் பிரான்என முன்னொரு காலத்து

நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்

மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 1995

 

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை

மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு

செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்

கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 1996

 

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க

அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்

கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்

நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 1997

 

நேரறி வாக நிரம்பிய பேரொளி

போரறி யாது புவனங்கள் போய்வரும்

தேரறி யாத திசையொளி யாயிடும்

ஆரறி வாரிது நாயக மாமே. 1998

 

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்

கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்

சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்

நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 1999

 

நாபிக்கண் நாசிநயன நடுவினும்

தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்

தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்

மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 2000

 

26. சிவாதித்தன்

 

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்

சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்

ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்

துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.2001

 

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்

அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்

விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து

அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2002

 

தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்

தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்

தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்

தானே வெளியொளி தானிருட் டாமே. 2003

 

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்

வையம் புனல்அனல் மாருதம் வானகம்

சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்

ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 2004

 

27. பசு இலக்கணம்

 

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்

பன்னு மறைகள் பயிலும் பரமனை

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை

அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.2005

 

அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்

துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்

தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்

பின்ன மடஅன்னம் பேறணு காதே.2006

 

28. புருடன்

 

வைகரி யாதியும் மாயா மலாதியும்

பொய்கரி யான புருடாதி பேதமும்

மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்

செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 2007

 

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2008

 

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்

சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய

இடர்கொண்ட பாச இருளற ஒட்டி

நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 2009

 

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுஅற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்

தணிவற நின்றான் சராசரம் தானே.2010

 

29. சீவன்

 

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே.2011

 

ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை

ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே. 2012

 

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே

கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்

பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்

கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.2013

 

மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து

ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட

ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்

ஆய துரியம் புகுந்தறி வாகவே.2014

 

30. பசு

 

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்

கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்

முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்

மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 2015

 

கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்

எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி

வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது

கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.2016

 

31. போதன் (அறிஞன்)

 

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை

சீவ னார்சிவ னாரை அறிகிலர்

சீவ னார்சிவ னாரை அறிந்தபின்

சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.2017

 

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்

மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்

பணவிளக் காகிய பல்தலை நாகம்

கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2018

 

அறிவாய் அறியாமை நீங்கி யவனே

பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்

அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்

செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 2019

 

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு

ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி

ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்

ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே.2020

 

சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்

அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்

தவமான செய்து தலைப்பறி கின்றார்

நவமான தத்துவம் நாடாகி லாரே.2021

 

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்

நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்

நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்

நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே.2022

 

32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

 

ஆக மதத்தன ஐந்து களிறுள

ஆக மதத்தறி யோடுஅணை கின்றில

பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்

யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே.2023

 

கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்

திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா

எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே

வருத்தினும் அம்மா வழிநட வாதே.2024

 

புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்

நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து

குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்

உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.2025

 

அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன

அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்

அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்

எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 2026

 

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்

ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்

ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்

ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.2027

 

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்

சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள

வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்

கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.2028

 

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை

எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்

எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்

எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 2029

 

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்

துதியின் பெருவலி தொல்வான் உலகம்

மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை

நிதியின் பெருவலி நீர்வலி தானே.2030

 

33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

 

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்

வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து

இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 2031

 

கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்

அடக்க லுறும் அவன்தானே அமரன்

விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை

நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.2032

 

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை

அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.2033

 

முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்

கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 2034

 

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.2035

 

பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்

விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்

பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்

அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.2036

 

இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த

கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்

தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்

துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.2037

 

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி

சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு

வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்

வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 2038

 

நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்

படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்

குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்

வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.2039

 

சென்றன நாழிகை நாள்கள் சிலபல

நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து

வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்

குன்று விழவதில் தாங்கலும் ஆமே.2040

 

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்

போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்

நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை

ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 2041

 

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே

அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்

சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்

வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.2042

 

கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்

எய்தி அவனை இசையினால் ஏத்துமின்

ஐவருடைய அவாவினில் தோன்றிய

பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.2043

 

34. அசற்குரு நெறி

 

உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்

கணுவின்றி வேதா கமநெறி காணான்

பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 2044

 

மந்திர தந்திர மாயோக ஞானமும்

பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்

சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு

அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.2045

 

ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்

காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு

ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்

கோமான் அலன்அசத் தாகும் குரவனே.2046

 

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்

தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்

நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே

முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 2047

 

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்

முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்

குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே

குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.2048

 

35. சற்குரு நெறி

 

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு

தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்

தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்

தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 2049

 

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்

தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்

தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்

தவிரவைத் தான் பிற வித்துயர் தானே.2050

 

கறுத்த இரும்பே கனகமது ஆனால்

மறித்துஇரும் பாகா வகையது போலக்

குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்

மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 2051

 

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்

நேசத்து நாடி மலமற நீக்குவோர்

ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்

பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 2052

 

நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற

நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே

ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற

நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 2053

 

பரிசன வேதி பரிசித்தது எல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்

குருபரி சித்த குவலயம் எல்லாம்

திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 2054

 

தானே எனநின்ற சற்குரு சந்நிதி

தானே எனநின்ற தன்மை வெளிப்படில்

தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற

ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 2055

 

வரும்வழி போம்வழி மாயா வழியைக்

கருவழி கண்டவர் காணா வழியைக்

பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்

குருவழியே சென்று கூடலும் ஆமே. 2056

 

குருஎன் பவனே வேதாக மங்கூறும்

பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து

ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி

வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 2057

 

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்

சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்

சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்

அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 2058

 

ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை

பற்றறு நாதன் அடியில் பணிதலால்

சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்

தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 2059

 

எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்

வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்

சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே

செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.2060

 

ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்

தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்

ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று

மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 2061

 

அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்

சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்

சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்

சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 2062

 

ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்

பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை

நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை

தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 2063

 

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்

ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது

பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த

ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 2064

 

அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க

இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே

அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே

இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே.2065

 

ஏறு நெறியே மலத்தை எரித்தலால்

ஈறில் உரையால் இருளை அறுத்தலான்

மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக

கூறு பரனே குருவாம் இயம்பிலே. 2066

 

36. கூடா ஒழுக்கம்

 

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களஒழிந் தாரே.2067

 

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்

பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்

மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்

மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.2068

 

பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்

மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது

வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்

பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.2069

 

வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை

நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்

வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்

அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 2070

 

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்

காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்

தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்

காயத்துள் நின்ற கருத்தறி யாரே.2071

 

கண்காணி யாகவே கையகத் தேயெழும்

கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்

கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்

கண்காணி யாகிய காதலன் தானே. 2072

 

கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை

மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை

தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை

என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 2073

 

காணாத கண்ணில் படலமே கண்ணொளி

காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி

காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்

காணாது கண்டார் களவொழிந் தாரே. 2074

 

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி

உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி

அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்

சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 2075

 

பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்

பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்

சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்

நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 2076

 

ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு

ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா

ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்

ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.2077

 

உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்

அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்

உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்

பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே.2078

 

உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்

உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்

உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை

அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.2079

 

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்

நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்

சிலவாணி யாகிய தேவர் பிரானைத்

தலைவாணி செய்வது தன்னை அறிவதே.2080

 

தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்

ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்

தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி

கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 2081

 

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்

கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை

நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்

தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.2082

 

இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்

வந்தன சூக்க உடலன்று மானது

தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்

முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 2083

 

37. கேடு கண்டு இரங்கல்

 

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்

அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்

உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்

முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.2084

 

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்

வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது

நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து

ஆதியை அன்பில் அறியகில் லார்களே.2085

 

கடன்கொண்டு நெற்குத்துக் கையரை

உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்

தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி

இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 2086

 

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து

புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன

பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்

உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.2087

 

நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்

என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்

அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று

குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.2088

 

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து

இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து

துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று

துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 2089

 

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கு அரிய பிரானடி பேணார்

பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்

பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 2090

 

ஆர்வ மனமும் அளவில் இளமையும்

ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்

தீர வருவதோர் காமத் தொழில்நின்று

மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 2091

 

இப்பரி சேஇள ஞாயிறு போலுரு

அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை

இப்பரி சேகம லத்துறை ஈசனை

மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.2092

 

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு

நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்

பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து

ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 2093

 

நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்

நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்

துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்

அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 2094

 

மிருக மனிதர் மிக்கோர் பறவை

ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை

பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்

திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே.2095

 

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்

சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை

ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற

நாதியே வைத்தது நாடுகின் றேனே.2096

 

இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு

பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்

வருந்தேன் நுகராது வாய்புகு தேனை

அருந்தேனை யாரும் அறியகி லாரே.2097

 

கருத்தறி யாது கழிந்தன காலம்

அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்

ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்

வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 2098

 

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்

விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த

விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்

கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.2099

 

கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த

திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்

வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்

நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 2100

 

வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து

இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை

அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று

விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.2101

 

38. இதோபதேசம்

 

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி

இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்

பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்

சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.2102

 

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை

வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை

இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை

நல்ல அரநெறி நாடுமின் நீரே.2103

 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.2014

 

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை

நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்

காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு

கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே.2105

 

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்

புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்

எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று

அக்காலம் உன்ன அருள்பெற லாமே.2106

 

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்

ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்

சாகின்ற போதும் தலைவனை நாடுமின்

ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 2107

 

பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்

இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்

சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்

பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 2108

 

கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்

பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்

ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு

நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 2109

 

விடுகின்ற சிவனார் மேல்எழும் போது

நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்

கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்

இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.2110

 

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று

நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்

ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி

வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.2111

 

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை

அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து

பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று

துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 2112

 

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு

மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு

மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.2113

 

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்

பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்

கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்

சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.2114

 

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை

எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை

நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்

அத்தகு சோதி அதுவிரும் பாரே. 2115

 

நியமத்த னாகிய நின்மலன் வைத்த

உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்

பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்

சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.2116

 

இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்

துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை

விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை

நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 2117

 

பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி

வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை

அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்

செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 2118

 

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்

அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை

அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்

குருவை வழிபடின் கூடலும் ஆமே.2119

 

நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்

கருமங்க ளாலே கழிதலில் கண்டு

குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்

பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.2120

 

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற

மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்

நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்

மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே.2121

 

--- ஏழாம் தந்திரம் முற்றிற்று ---


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)