திருமந்திரம் - ஆறாம் தந்திரம் (6/9)

saran
0

ஆறாம் தந்திரம் (1573 - 1703)




1.                                                             1. சிவகுரு தரிசினம்

பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே. 1573


பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த
தாசற்ற சற்குரு அம்பலமாமே. 1574.

சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 1575.

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 1576.

தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 1577.

சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே. 1578.

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 1579.

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே. 1580.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 1581

சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 1582.

தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 1583.

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 1584.

பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே. 1585.

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே. 1586

சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 1587.

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 1588

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 1589.

2. 
திருவடிப் பேறு

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1590.

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மின்றியே யாள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 1591.

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 1592.

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 1593.

குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்
றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 1594.

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 1595.

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 1596.

திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 1597.

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 1598.

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 1599.

கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்
குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 1600.

முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 1601.

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 1602

அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 1603

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 1604

3. 
ஞாதுரு ஞான ஞேயம்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே. 1605

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 1606

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென்ற பூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 1607.

வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 1608

முன்னை யறிவறியாதஅம் மூடர்போற்
பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்aன யறியப் பரனாக்கித் தற்சிவத்து
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 1609

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போகமுங் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே. 1610

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. 1611.

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 1612.

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 1613

4. 
துறவு

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1614

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து பலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 1615

அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே 1616

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 1617

கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 1618

உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்
டுழவன் அதனை யுழவொழிந் தானே. 1619

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 1620

நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படம்செய் துடம்பிட மாமே. 1621

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றாள் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே. 1622

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 1623

5. 
தவம்

ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1624

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து)
இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 1625

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 1626

இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 1627

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 1628

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே. 1629

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 1630

சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 1631

தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 1632

6. 
தவ நிந்தை

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1633.

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 1634

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 1635

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே. 1636

மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித்
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 1637

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 1638

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 1639

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 1640

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்
உடரடை செய்வ தொருமனத் தாமே. 1641

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 1642

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 1643

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 1644

7. 
அருளுடைமையின் ஞானம் வருதல்

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1645

தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதியறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 1646

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்
தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 1647

முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 1648

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 1649

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 1650

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 1651

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 1652

கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 1653.

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலெனே. 1654

8. 
அவ வேடம்

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1655

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 1656

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 1657

இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 1658

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 1659

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 1660

9. 
தவவேடம்

தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1661

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 1662.

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 1663.

காதணி குண்டலங் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 1664

10. 
திருநீறு

நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1665

கங்காளன் பூசுng கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. 1666

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 1667

11. 
ஞான வேடம்

ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர்
ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானமுள வேட நண்ணிநிற் பாரே. 1668.

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 1669.

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 1670

சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 1671

அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 1672

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 1673

ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே. 1674

தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 1675

12. 
சிவ வேடம்

அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1676

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 1677

மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற் றவரோடும் தாமே தாமாகிச்
செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 1678

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 1679

13. 
அபக்குவன்

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1680

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 1681.

ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே. 1682

வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 1683

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 1684

தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 1685

கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 1686

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே. 1687

வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 1688

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவன் அசற்சீட னாமே. 1689

14. 
பக்குவன்

தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1690

பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 1691

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 1692

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 1693

சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 1694

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 1695

சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 1696

சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 1697

அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 1698

சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 1699

உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 1700

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 1701

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 1702

சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 1703

--- ஆறாம் தந்திரம் முற்றிற்று ---

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)