
திருவையாறு ஐயாறப்பர் கோயில்
மூலவர்: ஐயாறப்பர், பஞ்ச நதீஸ்வரர்
அம்மன்: தருமசம்வர்த்தினி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி
ஊர்: திருவையாறு
அமைவிடம்:
திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
வழிபட்டோர்:
திருமால், அப்பர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சூரியபகவான், திருநாவுக்கரசர்
ஐந்து நதிகள்:
காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஐந்து நதிகள் பாய்வதால் ஐயாறு, திருவையாறு, பஞ்சநதி என்பது தலத்தின் பெயராக உள்ளது.
தேவாரப்பதிகம்:
”புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே”
–சம்பந்தர்
தல வரலாறு:
சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.
திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு மானசரோவர் குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரிடம் கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை அசரீரியாக அழைத்த சிவபெருமான் இந்த மானசரோவர் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் மானசரோவர் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். சிவபெருமான், அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார்.
இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது.
தல சிறப்பு:
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்.
இங்கே மூலவர் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது.
சிவனுக்கு வடைமாலை: இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு.
இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள் எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம்.
சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
இங்குள்ள தியான முக்தி மண்டபத்தில் நந்தி தேவர், விஷ்ணு, அகத்திய முனி ஆகியோர் உபதேசம் பெற்றனர். இந்த மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்தால் அது லட்சம் மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை.
தலபெருமை:
காஞ்சி காமாட்சி போன்று இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்தமையால் அறம்வளர்த்த நாயகி எனப்படுகிறாள். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இவ்வாலயத்தில் பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்க
ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி:
சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி’ என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சப்தஸ்தானம் விழா:
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற சிவஸ்தலங்கள் திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் மற்றும் திருவாஞ்சியம்.
ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும், நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சிவகணத் தலைமையும், முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார். அத்துடன் நில்லாது, ஐயாற்றெம்பெருமான் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.
கோவில் அமைப்பு:
சோழர்காலக் கல்வெட்டுக்கள் இவ்வாலயத்தில் மிகுதியாக உள்ளன. இக்கோயில் சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவீதிகள் உள்ளிட்டு 5 பிரகாரங்கள் கொண்டது.
சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. அந்தத் திருச்சுற்றிலேயே உமாமகேஸ்வரர், சங்கர நாராயணர், பரிவார மூர்த்தங்கள், பிரம்ம தேவர், திரிபுரசுந்தரி எழுந்தருளியுள்ளனர். இரண்டாம் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் ஆலயம், அருகில் ஜப்பேசுர மண்டபம் உள்ளது. அதில் பஞ்சபூத லிங்கங்கள், சப்த மாதாக்கள், ஆதிவிநாயகர், நவகிரகங்கள் எழுந்தருளியுள்ளனர்.
கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. பூலோக கைலாயமாகிய இங்கு தெற்கு கோபுரவாயில் வழியாக இறைவன் திருவிழாவின் போது வீதி உலா வருவார். நான்காம் திருச்சுற்றில் சூரிய புஷ்கரணி குளம், அப்பர் கயிலையைக் கண்டு தரிசித்த தென்கயிலாயமும், வடகயிலாயம் என்னும் ஓலோக மாதேவிச்சுரமும் உள்ளன. தென்கோபுர வாயிலில் ஆட்கொண்டார் சன்னதி உள்ளது. ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் திருக்கோலத்தில் உள்ளார். இங்கு குங்கிலியமிட்டு வழிபாடு செய்கின்றனர். குங்கிலியப் புகை பரவும் எல்லைவரை விஷம், எமபயம் ஏதுமில்லை என்பது நம்பிக்கை. ஆட்கொண்டேசரே மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதப் பௌர்ணமி விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இறைவன், இறைவியுடன் ஏழூ ஊர்களுக்கு வலம் வருவார்.
ஓம் நமசிவாய 🙏
திருச்சிற்றம்பலம் 🙇